வகுப்பிற்குள் நுழைந்தவுடன்,
ஒரு மாணவர் பரபரப்பாக இருந்ததை ஆசிரியரால் கவனிக்க முடிந்தது. “என்ன ஆச்சு ?”
அதற்கு முன்பாக ஒரு மாணவர், “எப்புடி சார், கரெக்டா கண்டுபிடிச்சுக் கேக்குறீங்க..?” “இங்க வந்து நின்னு பாருங்க...
எல்லாமே தெரியும். டீச்சருக்கு தெரியாம நம்ம பண்றோம்னு நெனச்சு சில வேலைகள வகுப்புல நீங்க செய்வீங்க..
ஆனா அவங்களுக்கு நல்லாத் தெரியும்.. அங்க பாரு...அவனோட கண்ணு எம்மேல இருக்கு...
ஆனா, கை பக்கத்து இருக்குறவனோட சட்டை நூலைப் பிரிச்சுகிட்டு இருக்கு..” திரும்பிப் பார்த்தும், திரும்பிப் பார்க்காமலும் சிரித்தனர். “சரி...
என்ன ஆச்சு.. ஏன் இப்புடி பரபரப்பா இருக்க..” “ஒரு கேள்வி கேக்கணும்..” “இதுக்கு ஏன் உடம்பெல்லாம் ஆடுது... கேளு..”
“ராபின்ஹூட் னா யாரு சார்..?” “என்ன இப்புடி திடீர்னு ஒரு கேள்வி..” “எங்கப்பா அவரோட பிரண்டுகிட்ட நேத்து பேசிட்டு இருந்தாரு சார்..”
“உங்க அப்பாகிட்ட கேக்கலையா நீ..” “வீட்டுப்பாடம் எழுதிட்டு இருந்தேன்..” “ராபின் ஒரு பெரிய வில்வீரன்...
அவன் தனி ஆளு இல்ல. ஏழு பேரா சேந்துதான் இயங்குனாங்க... அவங்க இலக்கே பணக்காரங்கதான். அவங்ககிட்ட இருந்து பணத்தப் புடுங்கி ஏழைங்களுக்குக் கொடுததாங்க..”
“நம்ம நாட்டுலயா, சார்..” “இல்ல... இங்கிலாந்துல.. ஒரு ஊர்த்தலைவர் மக்கள்கிட்ட வரிங்குற பேர்ல சித்தரவதை பண்ணுனாராம்..
அவர் வீட்டக் கொள்ளையடிச்சு, எல்லா பணத்தையும் அந்த மக்கள்கிட்ட விநியோகிச்சாராம்..”
“சட்டம் தன் கடமையைச் செய்யும் சொல்லி இவர உள்ள போட்டுருப்பாங்களே, சார்..” “கதைல அப்புடி ஒரு காட்சியே வரல...”
“சார்.. கதையா.. அப்போ ராபின்ஹூட்னு ஒரு ஆளு இல்லையா..”
“பணக்காரங்களுக்கும், ஏழைங்களுக்கும் பெரிய இடைவெளி இருந்ததுனால இப்புடி ஒரு ஆளு வந்தா நல்லாருக்கும்னு பண்ணுன கற்பனைதான் ராபின்ஹூட்..”
“நம்ம நாட்டுலயும் இடைவெளி அதிகம்தான சார்..” “நாங்க படிக்குறப்ப இந்தியா பணக்கார நாடு, இந்தியர்கள் ஏழைனு சொல்வாங்க...
இப்பவும் பொருளாதாரம் வளர்றதாத்தான் சொல்லிக்குறாங்க..” “எங்க சோசியல் சார் கூட, சராசரி வருமானம் பத்திச் சொல்றப்ப இப்புடித்தான் சொன்னாரு..”
“ஒவ்வொருத்தரும் எவ்வளவு இப்போ பாக்கெட்டுல வெச்சுருக்கீங்க..” 10, 30, 20, 40னு சொன்னார்கள்...
மற்றவர்கள் உதட்டைப் பிதுக்கினார்கள். ஒரு மாணவர் மட்டும் வடிவேலு பாணியில் பாக்கெட்டை வெளியில் இழுத்துக் காட்டினார்.. “
இங்க 25 பேரு இருக்கீங்க.. நாலு பேருகிட்ட 100 ரூபா இருக்கு... அப்போ இந்த வகுப்புக்கான சராசரி என்ன..?”
“100ஐ 25ஆல் வகுத்துரணும் சார்... 4 சார்... “ “இப்போ திடீர்னு நம்ம வகுப்புக்கு நடிகர் விஜய் வந்துட்டாரனா..” என்றவுடன் ஒரு பகுதி மாணவர்களிடம் ஆரவாரம்..
சிலரோ, “சார் அஜித் வரட்டும் சார்..” என்றார்கள். “படங்கள்ல வர்ற மாதிரி பொட்டி நிறைய பணத்தோட வந்தாங்கன்னு வெச்சுக்கலாம்... என்ன ஆகும்..”
“சராசரி எகிறுரும்... நாமெல்லாம் கோடீஸ்வரஙக ஆயிடலாம்.. ஆனா அவரு வெளில போற வரைக்கும்தான்... மறுப்டியும் 4னு மாறிருவோம்..” கைதட்டல் எழுந்தது.
சிரிப்புச் சத்தம் பக்கத்து வகுப்பு வரையில் சென்றது. “அப்போ இந்த சராசரினு சொல்றது உண்மையாக நிலையக் காட்டாதா, சார்..?” “காட்டாது...
“ “அப்போ ராபின்ஹூட் வரணுமா சார்...” “ராபின்ஹூட்குறது நல்ல கற்பனை... ஆனா, அதுக்காகக் காத்திருங்கனு சொல்லிட்டா என்ன பண்றது..”
“கே.ஜி.எப்.ல ராக்கியப் பிடிக்க ராணுவமே வந்துரும்.. அது மாதிரி ஒருவேளை ராபின்ஹூட் வந்துட்டா புடிச்சு உள்ள போட்டுருவாங்கதான சார்..”
“ராக்கி ஏழைகளுக்கு உதவி பண்ணுனாரா..? இல்லையே. ஒரு ஆளை நம்பியெல்லாம் நிலைமை மாறிடாது...
கூட்டு முயற்சிதான்.. அது சரி, நேத்து பாதைல கிடந்த கல்லத் தூக்கிப் போடச் சொன்னேனே... எங்க போட்ட..”
“சார், எல்லாரும் போயிட்டாங்க.. என்னால அத நகத்த முடியல... இன்னிக்குக் காலைல மூணுபேராச் சேந்துதான் தூக்கிப் போட்டோம்.. வெளிலயே போட்டுட்டோம்..”
“இதுக்கே கூட்டு முயற்சிதான் தேவைப்படுதுல்ல சார்...” என்றார் மற்றொரு மாணவர்.